Donnerstag, 10. Oktober 2013

ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே ...
காத்திருப்பான் கமலகண்ணன் ..அங்கே..
ராஜா மகள் ..ரோஜா மலர் .. நான் ராஜா மகள் ..
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே ...
வாராயோ வெண்ணிலாவே .. கேளாயோ எங்கள் கதையே ..
ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே ..


நெஞ்சில் குடி இருக்கும் அன்பருக்கு நான் இருக்கும் ..
வில்லேந்தும் வீரர் எல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே ..
நீ தானா என்னை நினைத்தது.. நீ தானே என் இதயத்திலே நிலை ..
கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு. . நெஞ்சில் பொங்குதம்மா ..
எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா ...
முகத்தில் முகம் பார்க்கலாம்... விரல் நகத்தினில் ..
ஆஹா ..இன்ப நிலாவினிலே ஓஹ்ஹோ ஜெகமே ஆடிடுதே..

அப்பப்பா.. எத்தனை எத்தனை பாடல்கள் ப.லீலா அவர்களின் இனிய குரலில் நம் காதுகளை வந்து தாலாட்டியவை. கிட்ட தட்ட அவர் பாடிய 7000 பாடல்களும் இனிமையானவையே. காரணம் அந்த கால கட்டம் அப்படி, அன்று வெளிவந்த அத்தனை பாடல்களும் சாகா வரம் பெற்றவை.

1948-ல் கங்கணம் என்ற படத்திற்காக ஏமனி சங்கரசாஸ்த்ரி அவர்களின் இசையில் சினிமாவில் பாட தொடங்கினார் பி.லீலா. அப்போது அவரின் வயது 14. எம்.எல்.வசந்தகுமாரி, ஜிக்கி, டி.பி.பெரியநாயகி, ஏ.பி.கோமளா, என்.சி.வசந்தகோகிலம் என பலரும் அப்போது தான் பின்னணி பாடும் துறை வளர்ச்சி அடைந்து பாடி கொண்டிருந்தனர். அவர்களிடையே நுழைந்து பாடி கொண்டிருந்தாலும் தனக்கென ஒரு இசை இருக்கையை கைப்பற்றி கொண்டவர் லீலா. 

1948 முதல் 49 வரை இருந்த 3 ஆண்டுகளிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி முன்னணி பாடகி ஆனார். 1950-களிலோ, எவருமே இவர் அளவு பாடமுடியாத அளவு பெயர் பெற்ற பாடகி ஆனார். எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா இணைந்து பாடிய எல்லாம் இன்ப மயம் என்ற பாடல் சி.ஆர்.சுப்பராமன் அவர்களின் இசையால் பேரு வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து சில படங்களில் எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா இணைந்து பாடும் போட்டி பாடல்கள் பிரபலம் ஆனது. 

1950களில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் எடுப்பார்கள். இரண்டு மொழிகளுமே தெரிந்தவர்களால் நேரமும் செலவும் குறைவு என்பதால் அவர்களுக்கே வாய்ப்பு அதிகம். மலையாளத்தை தாய் மொழியாக கொண்டாலும் லீலா அவர்கள் தமிழ், தெலுங்கில் மிக சரியாக உச்சரிப்பவர். எனவே மாயாபஜார், வேதாள உலகம், தேவதாஸ், குலேபகாவலி, வேலைக்காரி, லவகுசா, மிஸியம்மா என அவரின் பாடல்கள் தொடர்ந்தன...அந்த காலத்தில் கண்டசாலா, ப.லீலா ஜோடி வெகு பிரசித்தம். டி.எம்.எஸ். சுசீலா, எஸ்.பி.பி. எஸ்.ஜானகி போல இருவரின் குரலில் வெளியான பல பாடல்கள் கிறங்க செய்பவை.

சர்வாதிகாரி படத்தில் அவர் அஞ்சலி தேவி அவர்களுக்காக கிணற்றுக்குள் இருந்து பாடுவது போல பாடிய பாடல் அந்த காலத்திலே செய்யப்பட அற்புத புதுமை எனலாம். தங்கபதுமை படத்தில் இவர் பாடிய "வாய் திறந்து சொல்லம்மா" என்ற பாடலை பாடியபோது மயங்கி விழுந்தாராம். பாடலோடு ஒன்றி பாடுவதில் அத்தனை பக்தி கொண்டவர். கொஞ்சும் சலங்கை படத்திற்கு "கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு" பாடலை பாடியவர் சிங்காரவேலனே என்ற பாடலை, தன்னால் இந்த பாடலை பாட முடியாது, ஜானகி மட்டுமே பாட முடியும் என்று சொல்லி ஜானகியை புகழின் உச்சிக்கு கொண்டு போக செய்தவர் லீலா.

எல்லாவிதமான பாடலையும் ஒரு பாடகி பாட முடியும் என்று பாடி நிரூபித்தவர் லீலா. ராஜேஸ்வர ராவ், சுப்பராமன், எஸ்.வி.வெங்கட்ராமன், மெல்லிசை மன்னர்கள், இளையராஜா என எல்லோரிடமும் பாடியவர். 

1963-ல் வெளியான லவகுசா படத்தில் வெளியான "ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே" பாடல் லீலாவுக்கு மிகபெரிய புகழை தந்தது. இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய பாடலான இது, லீலாவுக்கு கிடைத்த பெரும்பாக்கியம் என்று அடிக்கடி சொல்வார். பாடுவது மட்டுமின்றி, 1968ல் வெளிவந்த முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்றிய சின்னாரி பாப்புலு படத்தின் இசை அமைப்பாளராகவும் இவர் பணியாற்றி அருமையான பாடல்களை அளித்தார். 

ஞானகோகிலம் என்று அழைக்கப்பட்ட, பி.லீலா அவர்களின் இளமை பருவம், சாதனைகள், விருதுகள், இறுதி காலம் யாவும் அடுத்த பதிவில் ... 

Keine Kommentare:

Kommentar veröffentlichen